கடையத்துல இருக்குத நித்ய கல்யாணி அம்மனுக்கு ஒரு அக்கா. அவா பேரு கல்யாணி. கடையத்துல இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்துல இருக்குத சிவசைலம்தான் இவா ஊரு. சொத்து சொகம்னு இருக்குத ரெண்டு பேருக்குள்ளயும் சின்ன மனச்சடவு. என்னன்னா கல்யாணிக்கு பிள்ளைலு இல்லை. நித்ய கல்யாணிக்கு நாலு பிள்ளைலு.
பொம்பளைக்கு பிள்ளைலுவோ இல்லைனா அது பெரிய மன வருத்தமாத்தான இருக்கும். இருந்தாலும் தங்கச்சி பிள்ளைலுவோளை அவ பிள்ளை மாதிரிதான் பார்த்துக்கிடுவா. தூக்கி வச்சு கொஞ்சுதது, சாப்பாடு கொடுக்கதுன்னு இருந்தா.ரெண்டு பேரு ஊருக்கும் ஏழு கி.மீட்டருதானே தூரம். இருந்தாலும் ஏகப்பட்ட வேலை இருந்ததால தங்கச்சி பிள்ளைல பாக்க முடியலை.
ரொம்ப நாளு கழிச்சு, நித்யகல்யாணி இருக்குத கடையத்துக்கு தங்கச்சிய பாக்க வந்தா. இவ வாரத கேள்விபட்ட நித்ய கல்யாணி, நம்ம குழந்தைகளை பாத்தான்னா என்னமும் நினைப்பாளோன்னு யோசிச்சுட்டு, குழந்தைகளை ஒரு ரூமுக்குள்ள போட்டு பூட்டிட்டா. ரெண்டுபேரும் அம்மனுவோ. இந்த விஷயம் கல்யாணிக்கு தெரியாம இருக்குமா? தெரிஞ்சு போச்சு.
தங்கச்சிக்காரிட்ட, ‘என்னைய இப்படி நினைச்சுட்டியே சண்டாளி, ஒன் குழந்தைகள்லாம் கருகி போவும்’னு சாபம் விட்டுட்டு போயிட்டா.நித்ய கல்யாணி பதறி போயி, குழந்தைகளை அடைச்சு வச்சிருந்த ரூமை திறந்து பாத்தா. அவ்வளவுதான். அவளுக்கு மூச்சு பேச்சில்லை. சாபம் விட்ட மாதிரியே குழந்தைகள்லாம் கருகி போச்சு.
பதறியடிச்சுட்டு அக்காட்ட ஓடுனா நித்ய கல்யாணி. அவா காலை புடிச்சுட்டு, ‘என்னை மன்னிச்சுக்கோ; தெரியாம நடந்து போச்சு. என் கொழந்தைகளை காப்பாத்து’ன்னு கதறினா. என்னத்த இருந்தாலும் தங்கச்சியில்லையா? சரின்னு கொழந்தைகளை காப்பாத்திட்டா.
அந்தானி சொன்னா;‘இனும நீயும் நானும் பாத்துக்கிடவே வேண்டாம். உன் மூஞ்சியிலயே முழிக்கவே மாட்டேன். இங்கியிருந்து பார்த்தா உன் வீட்டுல விளக்கெறியது தெரியும். நீ அங்கயிருந்து பாத்தா இங்க வெளக்கு எரியது தெரியும். இனும அது தெரியாது’ன்னு சொல்லிட்டு கொஞ்சூண்டு மண்ணை நுள்ளி வீசுனா, அது பொத்தையா வளந்து நின்னுச்சு.
இப்பவும் கோயிந்தபேரி பக்கத்துல இந்த மலை இருக்கு. நுள்ளி வீசுனதால இதுக்கு இந்தப் பெயரு. அது வழக்கு மாறி மாறி, இப்ப ‘முள்ளி மலை பொத்தை’ன்னு ஆயிப்போச்சு.
Sunday, June 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment