Wednesday, July 9, 2008

வங்கி தேர்வு - நடந்தது என்ன? - அம்பி

நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).

80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.

கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.

1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.

2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.


3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.


இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.

இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.

வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.

சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?

இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

No comments: