Sunday, June 29, 2008

சூலிபொத்தை -ஆடுமாடு

காட்டுக்குள்ள வீடு. பத்து பேரு குடும்பம், அங்க குடிசைய போட்டு விவசாயம் பாத்துட்டு இருக்கு. ஒரு இருவது வீடுவோ இருக்கும். மாணிக்கம் வீட்டுல ரெண்டு சமஞ்ச புள்ளைலுவோ. சுழியான பிள்ளைலுவோ. எடக்கு மடக்குன்னுதான் இருக்கும். ராத்திரிக்கு மேல வெளியில போவ கூடாதுன்னா இதுவோ அங்கதான் கெடக்கும். சேட்டைக்காரச்சியோ.

நாலாவது வீட்டுல இருக்குத பயலுக்கு மூத்தவ மேல கண்ணு. அரசல்புரசலா மாணிக்கத்துக்கு தெரிய வந்ததும் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டாவோ. பய வேலைல சரியா இருந்தாம். கர்ப்பமாயிட்டா புள்ள. நெற மாசம் வந்ததும், கூட ஒத்தாசைக்கு தங்கச்சிக்காரி இருந்தா. ஒரு நாளு பகல்ல எல்லாரும் வய வேலைக்கு போயிட்டாவோ. தங்கச்சிக்காரியும் போயிட்டா. நெறமாச சூலி வீட்டுல படுத்துக்கெடந்தா. திடீர்னு வாசல்ல இருந்து சத்தம் ‘ஐயா’ன்னு.

இவ உள்ளயிருந்து, ‘யாரு’ன்னு கேட்டா.‘நான் சன்னியாசி. தவமிருந்துட்டு வந்திருக்கேன். தலை வாழை இல போட்டு சாப்பாடு போடணும்’னு கேட்டிருக்காரு.

இவா, இது என்னடா கூத்தா இருக்குன்னுட்டு, ‘வீட்டுல யாருமே இல்லையே’ன்னா

‘அதான் நீ இருக்கியே’.

‘நான் சூலி, என்னால சமைக்க முடியாது. வீட்டுல நீத்தண்ணிதான் இருக்கு, அத வேணும்னா தாரேன்’ன்னா.

‘ம்ஹ¨ம். நீ வந்து சமைச்சு தந்தாதான் நான் சாப்பிடுவேன்’ன்னு சாமியாரு அடம்பிடிச்சிருக்காரு.

‘அப்படின்னா நீரு இங்ஙன பட்டினியாத்தான் கெடக்கணும்; எங்க வீட்டுக்காரங்க வந்ததும் தருவாவோ’ன்னு இவளும் கிண்டலா சொல்லியிருக்கா.

‘என்னையே ஏளன படுத்துதியா, பாரு உன்னை’ன்னுட்டு வீட்டு வாசல்ல கண்ணை மூட்டிட்டு உக்காந்துட்டாரு.

இதுக்குள்ள வய வேலைக்கு போன எல்லோரும் திரும்பி வந்துட்டாவோ. வீட்டு வாசல்ல இருந்த சாமியாரை பாத்து, மாணிக்கத்துக்கு ஒண்ணும் புரியலை. மவா கிட்ட கேட்டாம்.அவ வெஷயத்தை சொன்னா.

இது என்ன வம்பா போச்சுன்னு கண்ணை மூடிட்டு இருந்தவரை, ‘யோவ் சாமியாரே... என் வீட்டு வாசல்ல யாம்யா இருக்கீரு’ன்னு முதுவுல கைய வச்சு ஆட்டுனாம் மாணிக்கம்.அவரு திடுக்குன்னு முழிச்சுட்டு, ‘என் தவத்தை கலைச்சுட்டியே’ன்னு கோவமா பாத்தாரு.

‘எங்க வந்து என்னய்யா பேசுதீரு; மொதல்ல எடத்தை காலி பண்ணும்யா’னு சொன்னாம்.

‘எல்லாருமா சேர்ந்து என் கோபத்தை கிளறிட்டீங்க. உங்களை...’ன்னு சொல்லிட்டு கண்ணை மூடி தெறந்த சாமியாரு... ‘நீங்க கல்லா போங்க’ ன்னு சாபம் போட்டாரு.

அவரு கையை நீட்டி சொன்னதுமே எல்லாரும் கல்லா போயிட்டாவோ. இன்னைக்கும் அம்பாசமுத்திரம் பக்கத்துல இருக்குத காக்கநல்லூரு சூலி பொத்தையில, எல்லாரும் அப்படியே செல மாதிரி இருக்கத பாக்கலாம். பக்கத்துல வைக்கப் படப்பு, அம்மிக்கல்லு எல்லாம் செதஞ்சு போயி கெடக்கு.

No comments: