ரெண்டு நாளா மாந்தோப்பு பக்கத்துல அரசன், படையோட இருக்காம். எங்கயோ போவ வேண்டியவன் இங்க எதுக்கு இருக்காம்னு புரியல. எதுக்கு என்னன்னு ஊர்லயும் யாருக்கும் தெரியல. இதை போய் அரசன்கிட்ட கேக்கவா முடியும்? போற வாரவோயெல்லாம் அவன் கோவத்துல இருக்காங்கத மட்டும் சொல்லுதாவோ. கீழ்ப் பக்கத்துல ஏழெட்டு யானையோ. மேல் பக்கம் குதிரைகளா இருக்கு. வீரர்கள்லாம் வேல் கம்பை வச்சுக்கிட்டு கூட்டமா இருக்காவோ. ஊர் பூரா என்ன ஏதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காவோ.
வழக்கமா மேக்கு பத்துக்கு மாடு மேய்க்க போற பண்டார அண்ணாச்சி, இங்க என்ன நடக்குன்னு தெரியணுங்கறதுக்காக, இவங்க இருக்குத பக்கமா மாடு மேய்க்க போனாரு. ஊர்க்காரனுவோ முழுசா விசாரிச்சுட்டு வாடேன்னு வேற சொல்லிட்டானுவோ. சரின்னு கௌம்பிட்டாரு.
மாந்தோப்புக்கு உள்ள மாட்டை பத்திவுட்டுட்டு, இவங்க என்ன பண்ணுதாவோன்னு தூரத்துல நின்னுக்கிட்டு பார்த்தாரு. ஒரு யானை, கீழப் படுத்துக்கிடக்கு தும்பிக்கைய அங்க இங்கன்னு ஆட்டிக்கிட்டு. பக்கத்துல அரசன் உக்கார்ந்திருக்காரு. ஒரு ஆளு கையில பெரிய பெட்டிய வச்சுக்கிட்டு யானை கால்ல தடவி தடவி விடுதாரு. கால்ல கையை வச்சா யானை உதறுது. அந்தாளு யோசிச்சுட்டு நிக்கான்.
இவருக்கு ஒண்ணுமே புரியலை. அரசனுக்கு கோவம். பண்டாரத்துக்கு அங்க போவலாமா வேண்டாமான்னு குழப்பம். போனா அரசன் இங்க என்ன ஜோலின்னு கேட்டுட்டாம்னா?. அந்தானி பாத்துட்டே இருந்தாரு. ஒண்ணும் விளங்குத மாதிரி தெரியல. மனசுல தெரியத்தை வச்சுக்கிட்டு மெதுவா அரசன் இருக்குத பக்கம் போனாரு. இவரு வாரத பார்த்து நாலஞ்சு வீரனுவோ ஓடி வந்து தடுத்தானுவோ. இதை பாத்த அரசன், 'அவனை வர விடு'ன்னான். போனாரு பண்டாரம்.
'என்ன?'ன்னாரு அரசன்.
‘நான் மாடு மேய்க்கவன். எங்க ஊர்ல ரெண்டு நாளா இருக்கியோ. என்னன்னு தெரிஞ்சுக்கலாமேன்னுதான் இங்க வந்தேன்'னு சொன்னாரு பண்டாரம்.
அரசன் மேலயும் கீழயும் பாத்தாரு.
‘இங்க படுத்து கெடக்கு பாரு யானை. இது மேலதான் வந்தேன். இந்த இடத்துக்கு வந்ததும் திடீர்னு படுத்துக்கிட்டு. என்னன்னு தெரியலை. யானையை எழுப்ப பக்கத்தூர்லயிருந்தெல்லாம் வைத்தியருங்க வந்தாங்க. முடியல. அதான் இருக்கோம்'ன்னாரு அரசன்.
‘இவ்வளவுதானா? நான் வேற ஏதோன்னு நினைச்சேன். நான் வேணா யானைய எழுப்பட்டுமா?'ன்னாரு பண்டாரம்.
‘நீ என்ன வைத்தியனா'ன்னு கேட்டாரு அரசன். இல்லைன்னான்.
‘பெறவு எப்படி எழுப்புவே'ன்னாரு.
‘இப்ப பாருங்க'ன்னு யானை பக்கத்துல போனாரு பண்டாரம்.
பக்கத்துல இருந்த வைத்தியன், ‘நானே போராடி பாத்துட்டேன். நீ என்னத்த பண்ணிருவே'ன்னாரு.
இவரு ஒண்ணும் சொல்லலை. பேசாம, யானையோட காலை பாத்தாரு. காலு கொஞ்சமா வீங்கி இருந்துச்சு. அந்த காலு இருக்குத பக்கத்துல ஆழமா குழி தோண்ட சொன்னாரு அரசன்கிட்ட. வீரர்கள் வந்து தோண்டுனாவோ. அந்தானி பெரிய கயிறை கொண்டு வந்து, யானை கால்ல கட்டுனாரு பண்டாரம். கயிறோட ஒரு நுனியில பாறாங்கல்லை கட்டி குழிக்குள்ள போட்டாரு. யானையோட காலு புழுக்குன்னு குழிக்குள்ள போச்சு. டக்குன்னு சின்ன சத்தம். சரியா போச்சு. கயித்தை அவுத்துவிட்டாரு பண்டாரம். யானை கெந்தி கெந்தி எந்திரிச்சுட்டு.
அரசனுக்கு சந்தோஷம் தாங்க முடியலை.
‘என்ன பண்ணுன"ன்னு பண்டாரத்துக்கிட்ட கேட்டாம் அரசன்.
‘மாடுவோ கால்ல சுளுக்கு வந்துச்சுன்னா இப்படி படுத்துக்கிடும் பாத்துக்கிடுங்கோ. அதுக்கு பண்ணுததைதான் இதுக்கு பண்ணுனேன்'ன்னாரு பண்டாரம்.
‘யானைக்கு சுளுக்கா?'
ஆமான்னாரு பண்டாரம்.
சந்தோஷம் தாங்காத அரசன், ‘இந்தா இந்த இடம் பூராத்தையும் நீயே வச்சுக்கோ'ன்னு சுத்தி தெரிஞ்ச இடத்தையெல்லாம் இவனுக்கு கொடுத்துட்டாரு.
விஷயத்தை ஊர்ல வந்து சொன்னாரு பண்டாரம். எல்லாரும் அந்த இடத்தை பாக்கதுக்கு வந்தாவோ. வந்து பாத்தா குழி தோண்டுன இடத்துல ஊத்து பொங்கி தண்ணி வருது!
எல்லாருக்கும் ஆச்சரியம். குடிச்சு பார்த்தா அவ்வளவு ருசி. பெறவு பக்கத்துல சத்திரம் மாதிரி கெட்டுனாவோ. அன்னையில இருந்து இந்த இடத்துக்கு யானைக்கு சுளுக்கெடுத்த மடம் பேரு. இப்பம் பக்கத்துல கருப்பசாமி பூடம் வந்துபோச்சு.
இன்னைக்கும் பண்டாரம் குடும்பத்து ஆளுவோ ஒவ்வொரு சித்திரை விசுவுக்கும் இங்க ஐநூறு பேருக்காவது அன்னதானம் போடுதாவோ.
Sunday, June 29, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment